Published : 03 Jul 2021 07:24 PM
Last Updated : 03 Jul 2021 07:24 PM

ஆப்பிரிக்காவில் கரோனா மூன்றாம் அலை வேகம் அதிகமாக உள்ளது: உலக சுகாதார அமைப்பு

ஆப்பிரிக்காவில் கரோனா மூன்றாவது அலையின் வேகமும் அளவும் நாம் முன்பு பார்த்திராதது போன்றது உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க கண்டதிற்கான இயக்குனர் மாட்சிடிசோ மொயத்தி கூறும்போது, “ ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று ஒவ்வொரு மூன்று வாரத்துக்குப் பிறகும் இரட்டிப்பாகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. 9 நாடுகளில் கரோனா தீவிரமாகி உள்ளது” என்றார்.

இந்த நிலையில் டெல்டா போன்ற அதிக தொற்றை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்களால் உலகம் ஆபத்தான காலக்கட்டத்தில் உள்ளது என்று உலக சுகாதாரத் துறை தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அதோதானம் கெப்ரியாசிஸ் கூறும்போது, “ தடுப்பூசி குறைவாக செலுத்தும் நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து மருத்துவமனைகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதிக பரவல் தன்மை கொண்ட டெல்டா வைரஸ் போன்றவைகள் உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. டெல்டா போன்ற வைரஸ்களால் நாம் ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறோம். 98 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.

இந்த டெல்டா உருமாற்ற வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொற்று வேகமாகப் பரவுகிறது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகி்ச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த டெல்டா உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்ஃபா உருமாற்ற வைரஸைவிட 55 சதவீதம் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x