

ஈரானில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அரபு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ஈரானின் தென்பகுதி மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸ் காரணமாக ஈரானில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஈரான் ஐந்தாவது அலையை எதிர்கொள்ள இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் கரோனாவால் மோசமாக பாதிப்படைந்த நாடாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானில் இதுவரை கரோனாவுக்கு 80,000 பேர் பலியாகி உள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைத்து வருகிறது. ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் தவிர்த்து, உலகில் புதிதாக உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் பி.1.1.7 வகை கரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பி.1.351 வகை வைரஸ்கள், பிரேசிலில் பி.1. வகை வைரஸ்கள் தொற்றுப் பரவல் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்ற வைரஸ் தற்போது 96 நாடுகளில் பரவியுள்ளது.