Published : 14 Dec 2015 04:11 PM
Last Updated : 14 Dec 2015 04:11 PM
மும்பை தாக்குதலில் தனக்கு தொடர்பு இருப்பதாக இந்தியாவால் நிரூபிக்க முடியுமா என ஜமாத் உத் தவா தலைவரும், தாக்குதலில் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் என இந்திய அரசால் குற்றம்சாட்டப்படுபவருமான ஹபீஸ் சயீத் சவால் விடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திரும்பியுள்ளார். இந்நிலையில் ஹபீஸ் இந்தியாவுக்கு சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவேற்றியுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நமது அரசு மவுனம் காக்கிறது. ஆனால், சுஷ்மாவுக்கு நான் பதில் சொல்லப் போகிறேன். மும்பை தாக்குதல் நடந்து 7 ஆண்டுகள் ஆயின. ஆனால், அவர்களால் (இந்தியா) அந்த தாக்குதலில் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை நிரூபிக்க முடியவில்லை. அவர்களால் ஒருபோதும் நிரூபிக்க முடியாது.
மும்பைத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை அளிப்பதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டது. ஆனால் மற்றொரு புறம் 1971-ம் ஆண்டு போர் தொடர்பாக மோடி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
மோடியுடன் ஆலோசனை நடத்தியதன்மூலம் காஷ்மீர் முஸ்லிம்களை நவாஸ் ஷெரீப் புண்படுத்திவிட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் ஹபீஸ் சயீத் முக்கிய மூளையாக செயல்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT