Published : 22 Jun 2021 06:50 PM
Last Updated : 22 Jun 2021 06:50 PM

பொது இடங்களில் முகக் கவசம் வேண்டாம்: மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்த இன்னொரு நாடு

கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி சுகாதாரத் துறை தரப்பில், “இத்தாலியில் கரோனா தொற்று குறைந்து வருவதால் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இந்த நடைமுறை ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் பகுதிகள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. தற்போது கரோனா பதிப்பிலிருந்து மீண்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 52%க்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளைப் பெருமளவு செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, தென்கொரியா, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பொது வெளியில் முகக்கவசங்கள் அணிய வேண்டாம் என்று அறிவித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x