வடகொரியாவில் கரோனா இல்லையா? - புதிய தகவல்கள் அம்பலம்

வடகொரியாவில் கரோனா இல்லையா? - புதிய தகவல்கள் அம்பலம்
Updated on
1 min read

வடகொரியாவில் ஜூன் 10 -ம் தேதி வரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் யாருக்கும் கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது.

ஜூன் மாதம் 10 ஆம் தேதிவரை சுமார் 30,000 பேருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார அமைப்புக்கு அளித்த அறிக்கையில் வடகொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது.

ஆனால் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், “ 733 பேர் வடகொரியாவில் ஜூன் 4-10 தேதிகளில் பரிசோதிக்கப்பட்டனர், அவர்களில் 149 பேர் காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொடர்பாக வடகொரியாவின் நடவடிக்கைகளில் நீண்ட நாட்களாக உலக நாடுகளிடம் சந்தேகம் நிலவும் நிலையில் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கை வடகொரியாவின் உண்மை நிலவரத்தை உணர்த்தியுள்ளது.

சுகாதார கட்டமைப்புகளில் பின்தங்கியதாக கருதப்படும் வடகொரியா கரோனா தொற்றை எப்படி கையாள போகிறது என்று அச்சம் உலக நாடுகளிடம் ஏற்பட்டுள்ளது.

உலக முழுவதும் கரோனா பரவியதைத் தொடர்ந்து வடகொரியா எல்லை மூடல், வர்த்தக தடை, சுற்றுலா பயணிகளுக்கு தடை போன்றவற்றை விதித்து பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டை தனிமைப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார பாதிப்பை வடகொரியா எதிர் கொண்டுள்ளது.

முன்னதாக, வடகொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. இந்நிலையில், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் நிலவுவதாகத் தகவல்கள் கசிந்தன. இதையும் வடகொரியா மறைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாக வெளியான தகவலை அதிபர் கிம் சில நாட்களுக்கு முன்னர் ஒப்புக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in