

உலகிலேயே முதல் முறையாக சீனாவில் இதுவரை 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம் தரப்பில், ''உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 7 கரோனா தடுப்பூசிகளுக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இதில் இரண்டு கரோனா தடுப்பூசிகள் குழந்தைகளுக்குச் செலுத்தும் தகுதியுடையவை. இதன் காரணமாக கடந்த 5 நாட்களில் சீனாவில் 10 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக சீனாவில்தான் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை 43%க்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாகத் தடுப்பூசி செலுத்துவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவில் சினோபார்ம், சினோவாக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. சீனத் தடுப்பூசிகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.