Published : 19 Jun 2021 01:45 PM
Last Updated : 19 Jun 2021 01:45 PM

செப்டம்பர் மாதத்தில் டெல்டா கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும்: ஜெர்மனி 

ஜெர்மனியில் செப்டம்பர் மாதத்தில் டெல்டா கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் கரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் முதலே குறைந்ததன் காரணமாக, அங்கு மெல்ல மெல்லத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், கரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்தியதால் மூன்றாவது கரோனா அலையை ஜெர்மனி கட்டுப்படுத்தியது. இந்த நிலையில் இவ்வருட இறுதியில் டெல்டா கரோனா வைரஸின் தாக்கம் ஜெர்மனியில் ஏற்படலாம் என்று ஜெர்மனியின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜெர்மனியின் மூத்த சுகாதார அதிகாரிகள் தரப்பில், “ஜெர்மனியில் டெல்டா கரோனா வைரஸ் மெல்ல அதிகரித்து வருகிறது. டெல்டா கரோனா வைரஸ் ஜெர்மனியில் ஏற்படுமா என்பது கேள்வி அல்ல. அது எப்போது ஏற்படுகிறது என்பதே கேள்வி. ஜெர்மனியில் செப்டம்பர் மாதம் டெல்டா கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டதாக அறியப்படும் டெல்டா வைரஸ், இந்தியாவில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்டா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளது.

உருமாறிய கரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து, உருமாறிய கரோனா வைரஸ்களுக்குப் பெயரையும் வெளியிட்டது.

மேலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு லாம்ப்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x