Last Updated : 18 Jun, 2021 08:53 AM

 

Published : 18 Jun 2021 08:53 AM
Last Updated : 18 Jun 2021 08:53 AM

வடகொரியாவில் உணவுப் பஞ்சம்; வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அதிபர் கிம் ஜோங் உன்- ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3000க்கும் மேல் விற்பனை

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வடகொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரிவதில்லை.

இந்நிலையில், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் நிலவுவதாகத் தகவல்கள் கசிந்தன. இதையும் வடகொரியா மறைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாக வெளியான தகவலை அதிபர் கிம்மே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன் நிமித்தமாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் தொடங்கி அக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும்" என எச்சரித்துள்ளது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் அண்மையில் அந்நாட்டு உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், வடகொரிய மக்களின் உணவு நிலைமை மிகவும் கவலைக்குரிய வகையில் இருக்கிறது என்றார். வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் உற்பத்தி இலக்கை எட்டமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.3300.

காரணம் என்ன?

கரோனா பரவலைத் தொடந்து, வடகொரியா தனது நாட்டின் எல்லைகளை முற்றிலுமாக மூடியது. குறிப்பாக, சீனாவுடனான வர்த்தக தொடர்பை நிறுத்தியதாலும் இந்தப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. உணவு, உரம், எரிபொருளுக்கு வடகொரியா முற்றிலுமாக சீனாவையே நம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவில் பொருளாதாரம் ஏற்கெனவே ஆட்டம் கண்டுள்ளது. அணுஆயுதப் பரிசோதனைகள் அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. இந்நிலையில் தற்போது உணவுப் பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது.

1990களில் சோவியத் யூனியன் சுக்கு நூறாக நொறுங்கியது. அதுவரையில் சோவியத் யூனியனை இறக்குமதி பொருட்களுக்காக பெருமளவில் நம்பியிருந்த வடகொரியா பெரும் பஞ்சத்தை சந்தித்தது. அந்தப் பஞ்சத்தின்போது லட்சக்கணக்கான வடகொரியர்கள் உயிரிழந்தனர். இப்போது

அப்படியொரு சவாலை மீண்டும் வடகொரியா எதிர்கொண்டுள்ளது.

வடகொரிய பொருளாதாரம் தனது திட்டங்களால் வீழ்ச்சியடைந்துவிட்டதாக ஏற்கெனவே ஒப்புக்கொண்ட கிம்ஜோங் உன் தற்போது தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x