Published : 13 Jun 2021 03:11 AM
Last Updated : 13 Jun 2021 03:11 AM

சீனாவின் `பெல்ட் அண்ட் ரோட்' திட்டத்துக்கு எதிர்ப்பு: அமெரிக்க திட்டத்தை செயல்படுத்த ஜி-7 மாநாட்டில் பரிசீலனை

கர்பிஸ் பே (இங்கிலாந்து)

சீனா முன்வைத்துள்ள `பெல்ட் அண்ட் ரோட்' திட்டத்துக்கு ஜி-7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ள `பில்ட் பேக் பெட்டர் வேர்ல்டு’ (பி3டபிள்யூ) எனும் திட்டத்தை செயல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஏழை மற்றும் மத்திய தர நாடுகள் கட்டமைப்பில் பயன்பெறும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா முன் மொழிந்துள்ள `பெல்ட் அண்ட் ரோட்' (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம்சிறிய நாடுகள் மிகப் பெரும் கடன்சுமைக்கு ஆளாகும் என்ற விமர்சனம் பரவலாக எழுந்த நிலையில் இப்போது ஜி-7 மாநாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளுக்கு கடன் அளிப்பதாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு இத்திட்டத்தை சீனாவுக்கு வெளியே செயல்படுத்த திட்டம் வகுத்தார். இதன் மூலம் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். நாடுகளை சாலை வழி மூலம் இணைப்பதால் சர்வதேச அளவில் சரக்கு போக்குவரத்துக்கு வழிஏற்படும். அதிக செலவு பிடிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சீனாவுக்கு எவ்வித உள்நோக்கமும் கிடையாது என தொடக்கத்திலிருந்தே சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

சீன அரசு முன்வைத்துள்ள இந்த திட்டமானது பிற நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கும் ராஜதந்திர நடவடிக்கை என பலரும் விமர்சித்து வந்தனர்.

தற்போது ஜி-7 நாடுகள் முன்வைத்துள்ள திட்டமும் சர்வதேச அளவில் நாடுகளை இணைக்கும் திட்டமாகும். வளரும் நாடுகளுக்கு கட்டமைப்பு வசதிக்கு 40 லட்சம் கோடி டாலர் தேவைப்படும், ஆனால் கரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில் இது பெரும் சுமையாகத்தான் இருக்கும்.

அதேசமயம் பி3டபிள்யூ திட்டமானது அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திட்டமாகும். இதில் இனி வரும் காலங்களில் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளும் இணைய வாய்ப்பு உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.

சுற்றுச்சூழல், புவி வெப்பமடைவது, பணியாளர் பாதுகாப்பு, வெளிப்படையான செயல்பாடு, லஞ்ச ஊழல் இல்லாமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்டவை இதில் உள்ள அம்சங்களாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதி விவரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜி-7 இறுதி நாள் கூட்டத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா முன் மொழிந்த திட்டத்தில் முதலில் கையெழுத்திட்டது இத்தாலி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x