Published : 16 Dec 2015 10:01 AM
Last Updated : 16 Dec 2015 10:01 AM

சர்வதேச விண்வெளி மையத்துக்கு 3 நாடுகளின் வீரர்கள் பயணம்

ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் நேற்று ரஷ்ய ஏவுகணை மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. கடந்த 1998 நவம்பர் 20-ம் தேதி முதல் இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு ஒருமுறை வீரர்கள் சென்று திரும்புகின்றனர். கடந்த 2003-ம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில் இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து ரஷ்ய விண்வெளி மையத்தில் இருந்தே சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கஜகஸ்தான் பைகானூர் விண்வெளி மையத்தில் இருந்து சோயூஷ் ராக்கெட் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த யூரி மெலன்சென்கோ, அமெரிக் காவைச் சேர்ந்த டிம் கோப்ரா, பிரிட்டனை (ஐரோப்பிய யூனியன்) சேர்ந்த டிம் பீக்கே ஆகியோரை சுமந்தபடி இந்திய நேரப்படி நேற்று மாலை 4 மணி அளவில் சோயூஷ் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. பைகானூரில் இருந்து புறப்பட்ட 7 மணி நேரத்தில் 3 வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தனர்.

பிரிட்டன் தரப்பில் இதுவரை யாரும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்லவில்லை. அந்தப் பெருமையை டிம் பீக்கே பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x