டிரம்ப்பின் முஸ்லிம் விரோதப் பேச்சுக்கு மலாலா பதிலடி

டிரம்ப்பின் முஸ்லிம் விரோதப் பேச்சுக்கு மலாலா பதிலடி
Updated on
1 min read

பயங்கரவாதத்தை ஒழிக்க முற்படும் ஒருவர் ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் பழிக்க வேண்டாம் என்று நோபல் பரிசு வெற்ற மலாலா தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பிரிட்டனில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 150 குழந்தைகளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசும்போது குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, "உங்களிடமிருந்து இத்தகைய வெறுப்புப் பேச்சு வருவது கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க முற்படும் நீங்கள் ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் பழிக்க வேண்டாம். சில குழுக்கள் செய்யும் வேலைகளுக்கு 1.6 பில்லியன் முஸ்லிம் மக்களையும் பழிப்பது ஏற்க முடியது. உங்களின் பேச்சை நியாயப்படுத்தவும் முடியாது. அதனால் பலனும் கிடையாது.

உங்களது பேச்சால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது." என்றார்.

அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் அதிரடியாக கூறிவருகிறார். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால், தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ட்ரம்ப்பின் பேச்சு பரிசீலக்க வேண்டியது என்றும் இதனால் அதிபர் தேர்தலையொட்டி அவர் மீது புதிய நம்பகத்தன்மை ஏற்பட்டிருப்பதாகவும் சில கருத்து எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in