Published : 04 Jun 2021 01:15 PM
Last Updated : 04 Jun 2021 01:15 PM

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளன.

2009ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் பிரதமராக நெதன்யாகு பதவி வகித்தார். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி புகார்கள் கடந்த சில வருடங்களாக எழுந்து வந்தன.

நெதன்யாகு பதவி விலகக் கோரி ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்று வந்தன. எனினும் தொடர்ந்து நெதன்யாகு தனது பதவியைத் தக்கவைத்து வந்தார்.

இந்நிலையில் இஸ்ரேலில் அரபு கட்சி தலைமையில் 8 அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து நெதன்யாகுவின் ஆட்சிக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளன. இதனை யேஷ் அடிட் கட்சியின் தலைவர் யேர் லேபிட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணிக் கட்சிகள் சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொள்ள உள்ளன. இதன்படி வலதுசாரி கட்சியான யாமினா கட்சியின் தலைவர் பென்னெட் பிரதமராகப் பதவி ஏற்பார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இக்கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி அதிக இடங்களில் வென்றது. ஆனாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைப்பதில் நெதன்யாகுவுக்குச் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் நெதன்யாகுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x