Published : 03 Jun 2021 12:30 PM
Last Updated : 03 Jun 2021 12:30 PM
அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்களுக்கு பீர் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியை செலுத்துவதை ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. மேலும் மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பல்வேறு சலுகைகளை அமெரிக்கா அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பீர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர் & புஷ்ச் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4 -ம் தேதிக்குள் 70% அமெரிக்க மக்களுக்கு கரோனா தடுப்பூசிகளை செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 60% மக்களுக்கு கரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பைஸர், மாடர்னா போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT