Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM
கரோனா நெருக்கடி காலத்தில் இந்தியாவின் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளி ன்கன் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர்எஸ்.ஜெய்சங்கர் 5 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சென்றுள்ள முதல் இந்திய கேபினட் அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார். இந்நிலையில் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கனை சந்தித்துப் பேசினார். அப்போது பிளின்கன் கூறும்போது, "கடந்த ஆண்டு கரோனா நெருக்கடி காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவியது. இதை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது. இப்போது நாங்கள் இந்தியாவுக்கு உதவியாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.
இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது ஜெய்சங்கர் கூறும்போது, “நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தோம். பல ஆண்டுகளாக எங்கள் உறவு வலுவடைந்துள்ளது. இது தொடரும் என உறுதியாக நம்புகிறேன். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் எங்களுக்கு வலுவான ஆதரவு அளித்து வரும் ஜோ பைடன் நிர்வாகம் மற்றும் அமெரிக்காவுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
இதையடுத்து ஆன்டனி பிளின்கன் பேசும்போது, “நமது காலத்தின் பல்வேறு சவால்களுக்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. கரோனா வைரஸுக்கு எதிரானபோரிலும் நாங்கள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம். அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவு மிக முக்கியமானது, வலுவானது” என்றார்.
முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT