

பிரிட்டனில் அதிகரித்து வரும் கரோனா தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் B.1.617 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸினால் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து சுகாதாரத் துறை தரப்பில், “உருமாற்றம் அடைந்த B.1.617 வைரஸ் காரணமாக பிரிட்டனில் புதிதாக 6,959 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 3,535 ஆக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் அதிகரித்து வரும் கரோனா காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பி.1.617, தற்போது உலக அளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன.
பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.