Published : 28 May 2021 02:02 PM
Last Updated : 28 May 2021 02:02 PM

தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் 'டெம்பிள் ரன்' போட்டி

'டெம்பிள் ரன்' மொபைல் விளையாட்டின் போட்டி வடிவம் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.

2011ஆம் ஆண்டு வெளியான 'டெம்பிள் ரன்' விளையாட்டு மொபைல் பயனர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுவரை 200 கோடிக்கும் அதிகமான முறை இந்த விளையாட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் அமைப்பை அடிப்படையாக வைத்து நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதுவும் டெம்பிள் ரன் சுவைத்த வெற்றிக்குப் பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை.

தற்போது ஏ ஸ்மித் மற்றும் கோ க்ரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம், 'டெம்பிள் ரன்' விளையாட்டை உருவாக்கிய இமாங்கி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து புதிய தொலைக்காட்சித் தொடர் ஒன்றை உருவாக்கவுள்ளனர். இதில், 'டெம்பிள் ரன்' விளையாட்டில் வருவதைப் போல நிஜத்திலும் அதேபோன்ற அரங்கம் உருவாக்கப்பட்டு அதில் போட்டியாளர்கள் ஓட வேண்டும்.

''உலக அளவில் மிகப் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று டெம்பிள் ரன். இந்த சர்வதேச ஆட்டத்துக்குப் புத்துயிர் தர எங்களிடம் பெரிய திட்டங்கள் உள்ளன. அந்த ஆட்டத்தைப் போலவே வேகம், சுறுசுறுப்பு, விரைவாக முடிவெடுப்பது ஆகியவை இந்த போட்டியிலும் முக்கியப் பங்கு வகிக்கும்'' என்று ஏ ஸ்மித் அண்ட் கோ தயாரிப்புத் தரப்பில் கூறப்பட்டுள்ளது

இந்தப் புதிய கூட்டு 'டெம்பிள் ரன்' ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத ஒரு அனுபவத்தைத் தரும் என்று இமாங்கி ஸ்டுடியோஸின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x