Published : 26 May 2021 07:48 PM
Last Updated : 26 May 2021 07:48 PM

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி கண்டுள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம்

கரோனா தடுப்பூசியைச் செலுத்துவதில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி கண்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை தரப்பில், “தேசிய அளவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி கண்டுள்ளது. மேலும், நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அமீரகத்தில் 79% பேர் கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதைக் கடந்த 80% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே அமீரகத்தில் பொது நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பைஸர், சினோபார்ம், ஸ்புட்னிக்-வி போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அமீரகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x