

கரோனாவுக்கு எதிரான போரில் உலகம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “கரோனா வைரஸுக்கு இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 50 கோடிக்கும் அதிகமானவர்கள் வேலையை இழந்துள்ளனர். துன்பத்திலிருந்தவர்கள் மேலும் துன்பத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இது நீளும் என்று அஞ்சுகிறோம். கரோனாவுக்கு எதிரான போரில் உலகம் உள்ளது.
பணக்கார நாடுகள் தங்கள் பெரும்பான்மையான மக்களுக்குத் தடுப்பூசி போட்டு, அவர்களின் பொருளாதாரத்தைத் திறக்கும் சூழ்நிலையில் உள்ளன. அதே வேளையில் ஏழை நாடுகளில் கரோனா தீவிரம் அதிகமாகி வருகிறது” என்று அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.