கடத்தப்பட்ட பாதிரியார் நலமுடன் திரும்புவார்: ஆப்கான் இந்திய தூதர் நம்பிக்கை

கடத்தப்பட்ட பாதிரியார் நலமுடன் திரும்புவார்: ஆப்கான் இந்திய தூதர் நம்பிக்கை
Updated on
1 min read

ஆப்கானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியப் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் நலமாக இருப்பதாகவும் அவர் விரைவில் மீட்கப்படுவார் எனவும் அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் அமர் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார், ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

ஆப்கானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாரை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கும் பணியை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆப்கான் அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ஆப்கானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தூதர் அமர் சின்ஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக பாதிரியார் மீட்கப்படாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. நாங்கள் ஆப்கான் அரசுடன் இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் இணைந்தே செயல்பட்டு அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். பாதிரியார் நலமுடன் விரைவில் நாடு திரும்புவார்.

இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதில் உரிய ஆதாரங்கள் இன்றி இது குறித்து மேலும் எதவும் கூறுவதற்கு இல்லை என்றாலும் பாதிரியார் இன்னும் சில தினங்களில் மீட்கப்படுவார்.

மேலும், ஹெராத்தில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு லஷ்கர் இ தொய்பா இயக்கமே காரணம் என்று உறுதியாகி உள்ள நிலையில், ஹெராத் மற்றும் காபூலில் உள்ள இந்திய அலுவலகங்களுக்கு பாதிகாப்பு அதிகரித்தப்பட்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த பாதிரியாரை மீட்க கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 4 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். பாதிரியாரை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ஆப்கான் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் முதல்வரின் கடிதத்திற்கு, பிரதமர் நரேந்திரே மோடி பதிலளித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in