Published : 18 May 2021 06:13 PM
Last Updated : 18 May 2021 06:13 PM

காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்கா அழைப்பு

காசா பகுதியில் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை ஜோ பைடன் பேசும்போது, “ காசா பகுதியில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. இது தொடர்பாக இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் ஆலோசிக்கப்படட்து” என்றார்.

ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

மே 10ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்றும், இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

நடந்தது என்ன?

1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று அந்நாடு அப்போது அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. ஆனால், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக யாஹ்யா அல் சின்வார் 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலஸ்தீனப் போராளிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமான நபர்களைக் கொன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்றத்தில் யாஹ்யா அல் சின்வார் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x