Published : 15 Dec 2015 01:08 PM
Last Updated : 15 Dec 2015 01:08 PM
ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துவதை குறிப்பிட்டு, தங்களது அடுத்த குறி அந்த இயக்கத்தின் தலைவர்கள் தான் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா மறைமுகமாக எச்சரித்தார்.
சிரியா, இராக்கில் பெரும்பகுதியை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பகுதியை இஸ்லாமிய தேசம் என்று அறிவித்துள்ள ஐ.எஸ். அமைப்பு தனி அரசை நடத்தி வருகிறது. இவர்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் நடத்தி வருகின்றன.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா பேசும்போது, "ஐ.எஸ். மீது இதுவரை இல்லாத அதிகப்படியான தாக்குதலை நடத்த உள்ளோம். வான்வழித் தாக்குதலில் அந்த இயக்கத்தின் முக்கிய புள்ளிகள் ஒருவரை அடுத்து ஒருவராக வீழ்ந்து வருகின்றனர். இனி மேலும் அவர்களின் தலைவர்கள் ஒளிந்துகொள்ள முடியாது.
எங்களது தற்போதைய தகவல் மிகவும் எளிமையானது. எங்களின் அடுத்த குறி நீங்கள் தான்" என்றார் ஒபாமா.
சமீபத்தில் அமெரிக்க கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் நிதியமைச்சர் அபு சலாவும் அவரது கூட்டாளிகளும் கொல்லப்பட்டனர்.
ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி, இஸ்லாமிய தேசத்தின் தலைவராகவும் மதத் தலைவராகவும் விளங்குகிறார். அவரது தலைமையில் பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நிதித்துறை அமைச்சர் அபு சலா அமெரிக்கப்படைகளால் கொல்லப்பட்டது அந்த இயக்கத்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT