Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

காசாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீடு மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி ராக்கெட் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரிப்பு

காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீடு மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதலை நடத்தியது. இந்த சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது.

1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று அந்நாடு அப்போது அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. ஆனால் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக யாஹ்யா அல் சின்வார் கடந்த 2017-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலஸ்தீன போராளிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமான நபர்களைக் கொன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டுஇஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்றத்தில் யாஹ்யா சின்வார் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் காஸாவில் இருந்த பிரபல செய்தி நிறுவனங்களான அல் ஜசிரா, மற்றும் அசோசியேட் பிரஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் காசா மீதான தாக்குதல்தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காசாவிலுள்ள ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் வீடு மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘யாஹ்யா சின்வார், அவரது தம்பி முகமது சின்வார் உள்ளிட்டோரின் வீடுகள் மீது வான்வழியாக ராக்கெட்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் அவர்களின் வீடுகள் துல்லியமாகத் தாக்கப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான தாக்குதல் வீடியோக்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x