Published : 15 May 2021 04:44 PM
Last Updated : 15 May 2021 04:44 PM

தடுப்பூசியின் 2-வது டோஸ்; 50 வயதைக் கடந்தவர்களுக்குச் செலுத்தத் தீவிரப்படுத்தியுள்ளோம்: பிரிட்டன் பிரதமர்

50 வயதைக் கடந்தவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸைச் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “B1.617.2 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் நமது தளர்வு திட்டங்களுக்குத் தொந்தரவாக உள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் வடக்கு இங்கிலாந்தில் வேகமாகப் பரவுகிறது. இதனைத் தொடர்ந்து 50 வயதைக் கடந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வேகமாகச் செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக, பிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்தை வேகமாகச் செலுத்தியதன் காரணமாக அங்கு கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக 1.500க்கும் குறைவானவர்களே தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

உலக அளவில் கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்துவதில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை வகித்து வருகின்றன. உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x