

இஸ்ரேல் - ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையே நடக்கும் மோதல் குறித்து தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகள் எடுக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து துருக்கி துணை அதிபர் புபாத் ஒக்தே கூறும்போது, “ இஸ்ரேல் - பாலஸ்தீன அமைப்புகள் இடையே நடக்கும் மோதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நிறைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
ஆனால் முடிவு எட்டப்படவில்லை. அதற்குக் காரணம் தெளிவான நிலைப்பாடு இல்லாததே . இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் இவ்விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.
நடந்தது என்ன?
பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு மே 8-ம் தேதி இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தில் 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் பலியாகினர்.