Published : 12 May 2021 05:09 PM
Last Updated : 12 May 2021 05:09 PM

காசா தாக்குதல்: எர்டோகன் - புதின் ஆலோசனை

காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து துருக்கி அதிபர் எர்டோகனும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதால், துருக்கி அதிபர் எர்டோகன் தனது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தார். இந்த நிலையில் எர்டோகனும், புதினும் இன்று (புதன்கிழமை) தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து அரப் நியூஸ் வெளியிட்ட செய்தியில், “ஹமாஸ் - இஸ்ரேல் தாக்குதல், ஜெருசலேம் முன்னேற்றத்திற்காக ரஷ்யாவும், துருக்கியும் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து புதினும், எர்டோகனும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இப்பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பு அவசியம் என்று புதினிடம், எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு சனிக்கிழமை அன்று இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடி இருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தில் 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் பலியாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x