Published : 11 May 2021 08:24 PM
Last Updated : 11 May 2021 08:24 PM

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 22 பேர் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 22 பேர் பலியாகினர்.

பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு சனிக்கிழமை அன்று இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடி இருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 குழந்தைகள் உட்பட 22 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இஸ்ரேல் தரப்பில் ஹமாஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x