Published : 11 May 2021 12:49 PM
Last Updated : 11 May 2021 12:49 PM

பைஸர் கரோனா தடுப்பூசிகளை 12 - 15 வயதினருக்குச் செலுத்த அமெரிக்கா அனுமதி

12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் கரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாகம் தரப்பில், ”பைஸர் கரோனா தடுப்பூசியை 12 - 15 வயதுடையவர்களுக்கு அவசரத் தேவைகளுக்குச் செலுத்தலாம். கரோனாவை எதிர்கொள்ள இது முக்கியமான முடிவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த வாரம்தான் 12 - 15 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது.

”எங்கள் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அடுத்த இரண்டு வருடத்திற்குப் பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று ஆய்வுகளுக்குப் பின்னர் பைஸர் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வாய்வழியாக கரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கான முயற்சியில் பைஸர் நிறுவனம் இறங்கியது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. கரோனா தொற்றைத் தவிர்க்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x