Published : 10 May 2021 03:14 PM
Last Updated : 10 May 2021 03:14 PM

மசூதியில் கூடிய பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் போலீஸார் தாக்குதல்: 100க்கும் மேற்பட்டோர் காயம்

அல்-அக்ஸா மசூதியில் கூடிய பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் போலீஸார் தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “ஜெருசலேம் தொடர்பாக பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடி இருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் மீது வீசினர். மசூதி உள்ளேயும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. போலீஸார் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். இத்தாக்குதலில் காயமடைந்தவர்களில் பெண்களும் அடங்குவர்.

இந்த நிலையில் இத்தாக்குதலைக் கண்டித்து அப்பகுதியில் பாலஸ்தீனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அல் அக்ஸா மசூதி அருகே இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x