

சீனாவின் இரண்டு கரோனா தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவது குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் கரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து இந்த வாரம் அறிவிக்கப்படும். சில நாடுகள் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு எங்கள் முடிவுக்காகக் காத்திருக்கின்றன என்பதை நன்கு அறிவோம். விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பூசிகள் அமீரகம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனிகா ஆகிய தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.