

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச ஆட்சியின்போது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் புகாரில் சிக்கியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் மற்றும் அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனரத்னே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஜனவரி மாதம் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பொறுப்பேற்ற பிறகு சட்ட அமலாக்க அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அரசு குறுக்கிடுவதில்லை. விசாரணை அமைப்புகள் சுந்திரமாக செயல்படுகின்றன. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
தவறு செய்தவர்களை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்களை புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவதுடன் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியடைந்தது முதல் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. முன்னாள் பொருளாதார வளரச்சி அமைச்சர் மற்றும் ராஜபக்சவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.