

சவுதி அரசிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத்தக்கது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் கூறும்போது, “ ஈரானுடனான உறவு தொடர்பான சவுதி அரசிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத்தக்கது. இரு நாடுகளும் வேறுபாடுகளைக் கடந்து சமாதானம், ஸ்திரத் தன்மையுடன், பிராந்திய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருவதுடன் புதிய அத்தியாயத்தில் நுழைய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஈரான் - சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவைக் கொண்டிருப்பதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் - சவுதி இடையே பதற்றம் நீடிக்கிறது.