

திரவ ஆக்சிஜன், வென்டிலேட்டர், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறும்போது, “கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. இந்தியா கஷ்டமான காலகட்டத்தில் உள்ளது என்பதை நன்கு அறிவோம். பிரான்ஸும், இந்தியாவும் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்வோம்.
கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள், திரவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை பிரான்ஸ் அரசு அனுப்ப உள்ளது'' என்று தெரிவித்தார்.
உருமாறிய கரோனா வைரஸ்
பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வகை கரோனா வைரஸ்கள் தொற்றை அதிவேகமாகப் பரப்பும் தன்மை உடையவை.
இந்தியாவில் இரண்டு வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தம் நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. அமீரகம், ஈரான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. வங்கதேசமும் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.