Published : 23 Apr 2021 11:32 AM
Last Updated : 23 Apr 2021 11:32 AM

இந்தியாவுக்கு பிரான்ஸ் உறுதுணையாக இருக்கும்: மக்ரோன்

இந்தியாவுக்கு பிரான்ஸ் உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டின் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிர நிலையை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் கரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தம் நாட்டு மக்களிடம் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கான ஆதரவை பிரான்ஸ் வழங்கியுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறும்போது, “யாரையும் விட்டுவைக்காத இந்தக் கஷ்டத்தில் பிரான்ஸ் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்தியாவுக்கான ஆதரவை அளிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

பிரான்ஸில் கரோனா தொற்று குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து அங்கு மே மாதம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிரான்ஸ் அதிபர் மக்ரோன், ஊரடங்கு அறிவிக்கப்படாது என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை மட்டுமே பிரான்ஸ் அரசு அறிவித்து வந்தது. இந்த நிலையில் கரோனா தொற்று குறைந்துள்ளதைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும், மே மாதத்துக்குள் 2 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. பிரான்ஸில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x