Published : 22 Apr 2021 07:18 PM
Last Updated : 22 Apr 2021 07:18 PM

தடுப்பூசி போட ஊழியர்களுக்கு நேரம் ஒதுக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை: ஜோ பைடன் அறிவிப்பு 

ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள நேரம் ஒதுக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் கரோனாவால் ஏற்படும் உயிர் பலி குறைந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “சிறு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் என அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.

500க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும் இந்த முறை பொருந்தும். அமெரிக்கா தனது இலக்கை அடைந்துள்ளது. புதிய அரசு பதவி ஏற்று 100-வது நாளின் முடிவில் இதுவரை 20 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில் இதுவரை 38% மக்கள் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் கரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று விகிதம் ஏற்ற இறக்கத்தைக் கண்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்தான் கரோனா தடுப்பு மருந்து அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x