Last Updated : 17 Apr, 2021 02:18 PM

 

Published : 17 Apr 2021 02:18 PM
Last Updated : 17 Apr 2021 02:18 PM

கியூபாவில் 60 ஆண்டுகள் சகாப்தம் முடிவுக்கு வருகிறது; கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராவுல் காஸ்ட்ரோ விலகுகிறார்

கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவருமான ராவுல் காஸ்ட்ரோ | படம் உதவி ட்விட்டர்

ஹவானா

அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்னமாகத் திகழந்துவரும் குட்டி நாடான கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

ஏறக்குறைய 60 ஆண்டுகளாக கேஸ்ட்ரோ குடும்பத்தினர் கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்த நிலையில் அந்த மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அடுத்தும் நாட்டை ஆளவரும் இளம் தலைமுறையினருக்கு பொறுப்புகளை வழங்குவதாகக் கூறி ராவுல் காஸ்ட்ரோ பதவி விலக உள்ளார்.

1959ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் ஆட்சி அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பிடல் காஸ்ட்ரோ கியூப அதிபரானார். அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து கியூபாவின் அசைக்க முடியாத தலைவராக விளங்கி வந்தார் பிடல்.

அமெரிக்காவின் பல்வேறு தடைகள், கொலை முயற்சிகள் (கிட்டத்தட்ட 600 முறை ), பொருளாதாரத் தடை ஆகியவற்றைத் தாண்டி இரும்பு மனிதராக கியூபாவை பிடல் வழி நடத்தி வந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்ட ராவுல் கேஸ்ட்ரோ 2008ல் முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 2011ம் ஆண்டு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்து, 2-வது முறை அதிபராக ரவுல் கேஸ்ட்ரோ நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கியூபாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு அதிபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால், அதிபர் பொறுப்பிலிருந்து விலகிய ராவுல் காஸ்ட்ரோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

ராவுல் காஸ்ட்ரே அதிபராக இருந்த காலத்தில் பரமவைரியான அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். 2014ம் ஆண்டில் அதிபராக இருந்த பாரக் ஒபாமாவுடன் ராவுல் காஸ்ட்ரோ சந்தித்து பேசினார். காலங்காலமாக எதிரியாக இருந்த அமெரிக்காவுடன் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ நட்பாக சென்றது உலக நாடுகளிடையே வரவேற்பைப் பெற்றது. கியூபா மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளும் அப்போதைய அதிபர் ஒபாமாவால் விலக்கப்பட்டன. ஆனால், அதைத்தொடர்ந்து வந்த அதிபர் ட்ரம்ப் மீண்டும் பல பொருளாதாரத் தடைகளை கியூபா மீது விதித்தார்.

ஏறக்குறைய 60 ஆண்டு காலம், உலகில் கியூபாவின் முகமாக, கம்யூனிஸத்தின் முகமாக காஸ்ட்ரோ சகோதரர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால், இந்த சகாப்தம் விரைவில் முடிகிறது.

இந்நிலையில் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில்தான் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

இ்ந்தக் கூட்டத்தில் ராவுல் காஸ்ட்ரோ பேசுகையில் “ நான் எனக்கு வழங்கப்பட்ட இலக்கை, பணியை முடித்துவிட்டதாக மனநிறைவு கொள்கிறேன். இனி என்னுடைய மண்ணை எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை வந்துள்ளது” என அறிவித்தார்.

ஆனால், தனக்குப்பின் யாரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிக்கப்போகிறார் என்பது குறித்து ராவுல் காஸ்ட்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ராவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தஇடத்தில் இருக்கும் 60 வயதான மிகுல் டியாஸ் கேனல் அந்த பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது.

ராவுல் காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பால் கியூபாவில் 60 ஆண்டுகாலம் ஆட்சியில் இந்த காஸ்ட்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

ஆனால், கியூவில் இப்போது மிகமோசமான பொருளாதார சூழல் நிலவும்போது, ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கரோனா வைரஸ் தொற்று, அதிக வேதனைகள் நிறைந்த நிதிச்சீர்த்திருத்தங்கள், ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த கடும் பொருளாதாரத் தடைகள் போன்றவற்றால் பொருளாதாரம் கடந்த ஆண்டு 11 சதவீதம் சரிந்தது. சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உணவுக்காக மக்கள் நீண்ட வரிைசயில் நிற்பதையும், சமூகத்தில் அதிகரித்துள்ள ஏற்ற தாழ்வுகளையும் பல நகரங்களில் காண முடிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x