Published : 15 Apr 2021 03:08 PM
Last Updated : 15 Apr 2021 03:08 PM

உடற்பயிற்சிகள் கரோனா பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கின்றன: ஆய்வில் தகவல்

தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கரோனா பாதிப்பால் உண்டாகும் தீவிரத் தன்மைகள் ஏற்படுவதில்லை என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலிபோர்னியா மருத்துவ ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''நாங்கள் இது தொடர்பாக 50,000 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளோம். இதில் உடற்பயிற்சியைத் தங்களது தினசரியாகக் கொண்டவர்கள் கரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை. மேலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் லேசான அறிகுறிகளுடன் குணமடைந்துள்ளனர். இறப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ''உடற்பயிற்சி மேற்கொள்வது மிக மிக அவசியம். உடல் அசைவுகள் இருக்கும் போதுதான் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நுரையீரல் செயல்பாடு சரியாக இருந்தால் கோவிட்-19 வைரஸால் நுரையீரலில் தாக்குதல் ஏற்படுவது குறையும். நுரையீரலில் இருந்து கிருமிகள் வாஷ் அவுட் ஆகும். அதனால், ஆரோக்கியமான உணவுடன் அன்றாட உடற்பயிற்சிகளையும் கைவிடாதீர்கள்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x