Published : 12 Apr 2021 07:16 PM
Last Updated : 12 Apr 2021 07:16 PM
நாடான்ஸ் அணு உலை விபத்துக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
நாடான்ஸ் ஆலையின் ஒரு பகுதியில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது. இதுகுறித்து ஈரான் கூறுகையில், ''பயங்கரவாத சதி காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கதிரியக்கக் கசிவு ஏதும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை'' என்று தெரிவித்தது.
இந்த நிலையில் இத்தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியுள்ளது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவித் சாரீஃப் கூறும்போது, “பொருளாதாரத் தடைகளை நீக்குவதில் நாம் முன்னேறிக் கொண்டு இருப்பதால் இஸ்ரேலியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெளிப்படையாகப் பொருளாதாரத் தடைகளை நீக்கவிட மாட்டோம் என்று கூறி இருக்கிறார்கள். நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம்” என்று தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி:
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.
மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில், 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.
இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது. இந்த நிலையில் ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைப்பு காட்டி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT