Last Updated : 08 Apr, 2021 09:14 AM

 

Published : 08 Apr 2021 09:14 AM
Last Updated : 08 Apr 2021 09:14 AM

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து தற்காலிக தடை

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இங்கிருந்து நியூசிலாந்து நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்.

செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது.

கடந்த ஆண்டைவிட கரோனா 2-வது அலையில் தொற்று வேகமாகப் பரவுகிறது. இளைஞர்கள் அதிகமான அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என டெல்லி லோக்நாயக் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

2-வது அலையில் நோய்ப் பரவலின் வேகம் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதிப்பும் அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் இங்கிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து நாடு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவும் வரும் 11ம் தேதி தொடங்கி 28ம் தேதி (ஏப்ரல் 28) வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை இந்தியா வந்துள்ள நியூசிலாந்து நாட்டவருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் ஜெசிந்தா இந்த உத்தரவு பற்றி தெரிவித்தார். மேலும், இந்த காலகட்டத்தில் அரசாங்கம் கரோனா பரவல் அபாயத்தைத் தடுப்பது குறித்து ஆராயப்பட்டு பின்னர் பயணத் தடையை விலக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் சிறப்பாகச் செயால்பட்டதன் காரணமாக சர்வதேச நாடுகளால் பாராட்டப்பட்டார்.

இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாகவே தேர்தலில் ஜெசிந்தா மாபெரும் வெற்றியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x