

மும்பை தாக்குதல் தீவிரவாதி டேவிட் ஹெட்லி காணொளி காட்சி மூலம் ஆஜராகி மும்பை தடா நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பார் என அவரது அமெரிக்க வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த 2008, நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், அமெரிக்காவை சேர்ந்த பாகிஸ் தான் வம்சாவளியரான லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தாக்குதல் நடப்பதற்கு முன் இந்தியாவுக்கு ஐந்து முறை வந்திருந்த டேவிட் ஹெட்லி மும்பை மாநகரின் முக்கியமான இடங்களை உளவு பார்த்து, அதன் வீடியோ பதிவுகளை பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் அளித்தது அம்பலமானது.
கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவில் கைதான டேவிட் ஹெட்லிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. எனினும் இந்திய தண்டனை சட்டத்தின்படி அவரை குற்றவாளியாக பதிவு செய்வதற்கான ஷரத்துக்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இதற்காக டிசம்பர் 10-ம் தேதிக்குள் ஹெட்லியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கடந்த 19-ம் தேதி மும்பை தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், அமெரிக்காவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் டேவிட் ஹெட்லி விரைவில் சாட்சியம் அளிப்பார் என அவரது வழக்கறிஞர் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, ‘‘மும்பை தடா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்தேன். அமெரிக் காவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் எந்தவொரு அன்னிய நாட்டின் விசாரணைக்கும் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளிக்க தான் தயாராகவே இருப்பதாக ஹெட்லி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி அவர் விரைவில் சாட்சியம் அளிப்பார்’’ என்றார்.