Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

அலாஸ்காவில் ஹெலிகாப்டர் விபத்து- ஐரோப்பிய கோடீஸ்வரர் பீட்டர் கெலினர் மரணம்

பீட்டர் கெலினர்

சான் பிரான்சிஸ்கோ

அலாஸ்காவின் மலைப் பகுதியில் நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐரோப்பிய கோடீஸ்வரர்களில் ஒருவரான பீட்டர் கெலினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

அலாஸ்கா மலைப்பகுதியில் ஹெலி-ஸ்கையிங் எனப்படும் பனிச் சறுக்கில் பங்கேற்க இவர்கள் அனைவரும் ஹெலிகாப்டரில் பயணித்தது தெரியவந்துள்ளது.

செக் குடியரசைச் சேர்ந்த பீட்டர் கெலினர் (56) ஐரோப்பாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவராகபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றவர். அலாஸ்கா மலையில் மீட்புப்குழுவினர் விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டுள்ளனர். இவருடன் உயிரிழந்தோரில் பெஞ்சமின் லாரோசியாக்ஸ் (50), கிரெக் ஹார்ம்ஸ் (52), சீன் மெக்மெனாமி (38), பைலட் ஜகாரி ரஸ்ஸல் ஆகியோரும் அடங்குவர். இந்த ஹெலிகாப்டரில் பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்லை. 5,500 அடி உயரத்திலிருந்து ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. உறைபனி நிலவியபோதிலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஹெலிகாப்டர் வாடகைக்காக பயணிகளை இதுபோல் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுவதாகும். இதில் ஒருவருக்கு 15 ஆயிரம் டாலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது.

இதுபோன்ற மலைச் சறுக்கு பயணங்களை கெலினர் அடிக்கடி மேற்கொள்வது வழக்கம் என்றும் அவர் இப்பகுதிக்கு அடிக்கடி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது சொத்து மதிப்பு 1,750 கோடி டாலராகும். நெதர்லாந்தைச் சேர்ந்த பல நிறுவனங்களில் இவரது பிபிஎப் குழுமம் பெருமளவிலான பங்குகளை வைத்துள்ளது. தொலைத் தொடர்பு, நிதி, உயிரித் தொழில்நுட்பம், சுரங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் இவரது நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனங்களின் சொத்து மதிப்பு 5,000 கோடி டாலராகும் என நிறுவன இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்கோஸ்லோவோகியாவில் உள்ள வடக்கு பொகிமியாவில் பிறந்த இவர் ஆரம்பத்தில் ஜெராக்ஸ் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருமந்தார். 1989-ம் ஆண்டு செக் குடியரசு சிதறுண்டபோது பொதுத்துறை நிறுவன பங்குகளை இவர் வாங்கியுள்ளார். இதில்முக்கியமானது காப்பீடு நிறுவனமாகும். இவரது மறைவுக்கு செக் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x