

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட பிரம்மாண்ட ‘எவர் கீரின்’ கப்பல் பாதி மீட்கப்பட்டு மிதக்கும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மெரைன்’ என்ற நிறுவனம் இயக்கிவரும் ‘எவர் கிவன்’ என்ற சரக்குக் கப்பல் கடந்த வாரம் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டது. இந்த நிலையில் ஒருவாரம் மேற்கொண்ட மீட்புப் பணியின் விளைவாக எவர் கீரின் கப்பல் பாதி மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சூயஸ் கால்வாயில் எவர் கீரின் கப்பல் மிதக்கத் தொடங்கியுள்ளது. இதனை எகிப்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது. கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சூயஸ் கால்வாயின் இரு முனைகளில் நிற்கும் சரக்குக் கப்பல்கள் விரைவில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவர் கிரீன் கப்பல் சிக்கிக் கொண்டது எப்படி?
உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான ‘எவர் கீரின்’ கப்பல் 20 ஆயிரம் கண்டெய்னர்களைக் கொண்டு செல்லத்தக்கது.
400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 23-ம் தேதி சூயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதனால் அந்தக் கப்பல் கால்வாயின் குறுக்காகத் திரும்பி மணலில் சிக்கியது.
மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையாக விளங்குகிறது. உலக வர்த்தகத்தின் 12 சதவீதம் இந்தக் கால்வாயின் வழியாக நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தக் கால்வாயின் குறுக்காக ‘எவர் கிவன்’ கப்பல் தரை தட்டியதால் அந்த வழியாக பிற கப்பல்கள் செல்ல முடியாத நிலை உருவானது. கிட்டத்தட்ட கால்வாயின் இருபுறம் 160 கப்பல்கள் செல்ல வழியின்றி நின்றன. இதனால் தினமும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்தன.