Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி: சீன அரசின் அறிக்கையில் தகவல்

சீனாவில் பணியாற்றும் வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சில பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அந்த வகையில் சீன தேசிய பயோடெக் குழுமத்தின் சினோபார்ம் நிறுவனம் கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதை சந்தைப்படுத்த சீன தேசிய மருந்து உற்பத்தி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து சீன அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெய்ஜிங் நகரில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பத்திரிகை யாளர்கள் தாமாக முன்வந்து சினோபார்ம் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இதற்கு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு இது தொடர்பான விவரங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என பல்வேறு கட்ட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசியால் பின்விளைவுகள் ஏற்படாது என உத்தரவாதம் அளிக்க முடியாது.

சீனாவில் இந்த தடுப்பூசி 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரை 6.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில்தான் கரோனா வைரஸ் முதன் முதலில் பரவியது. அதன்பிறகு உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சீனா இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x