அமெரிக்காவில் கரோனாவால் வேலையிழந்து தவித்த ஆசிரியருக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்

அமெரிக்காவில் கரோனாவால் வேலையிழந்து தவித்த ஆசிரியருக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்
Updated on
1 min read

அமெரிக்காவில் கரோனாவால் வேலையிழந்து தவித்த ஆசிரியருக்கு, அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் உதவி செய்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பான்டானா பகுதியைசேர்ந்தவர் ஸ்டீபன். இவரது வீட்டுக்கு அருகேயுள்ள வாகன நிறுத்தும் இடத்தில் ஒரு முதியவர், ஏழ்மையான நிலையில் காரில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.

பல நாட்கள் அவரை கவனித்த ஸ்டீபன், அந்த முதியவர் தனது ஆசிரியர் ஜோஸ் (77) என்பதை கண்டுபிடித்தார். அவரை நேரில் சந்தித்து விசாரித்தார். கரோனாவால் வேலையிழந்த ஜோஸ், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் காரில் வாழ்க்கை நடத்தி கொண்டிருப்பதை ஸ்டீபன் அறிந்து கொண்டார். உடனடியாக அவருக்கு ரூ.22,000 கொடுத்து ஒரு ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்தார்.

பின்னர் சமூக வலைதளம் மூலம் ஆசிரியர் ஜோஸிடம் படித்த மாணவர்களின் உதவியை நாடினார். தகவல் அறிந்த மாணவர்கள் தாராளமாக நிதியுதவியை வழங்கினர். 24 மணி நேரத்தில் ரூ.19லட்சம் குவிந்தது. அந்த தொகையை ஆசிரியர் ஜோஸிடம் நேற்று முன்தினம் ஸ்டீபன் வழங்கினார்.

இதுகுறித்து ஆசிரியர் ஜோஸ் கூறும்போது, "எனது மனைவி மெக்ஸிகோவில் வசிக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரது சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. கரோனாவால் ஆசிரியர் பணியை இழந்துவிட்டேன். அமெரிக்க அரசு வழங்கும் ஓய்வூதியத்தில் பெரும் தொகையை எனதுமனைவிக்கு அனுப்பிவிடுவேன்.

மீதமுள்ள பணத்தை வைத்து காரில் வாழ்க்கை நடத்தி வந்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்ட மாணவர்கள் எனக்கு பேருதவியை செய்துள்ளனர்" என்று கூறி கண்கலங்கினார். மாணவர் ஸ்டீபன் கூறும்போது, "பான்டானா நகர பள்ளியில் நாங்கள் படித்தபோது ஜோஸ் எங்களது ஆசிரியராக இருந்தார். அவர் வறுமையில் தவிப்பதை அறிந்து சக நண்பர்களின் உத
வியை நாடினேன். ரூ.4 லட்சம் நிதிதிரட்டி ஆசிரியரிடம் வழங்க திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் ஒரே நாளில் ரூ.19 லட்சம் கிடைத்துவிட்டது. அதை அப்படியே ஆசிரியர் ஜோஸிடம் வழங்கிவிட்டோம். எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிய அவருக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in