

எச் 1 பி விசா வழங்குவதற்கென குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம்குறித்த அறிவிப்பை முந்தைய ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது. அதை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு புதிய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களில் பணிபுரியும் வெளி நாட்டுப் பணியாளர்கள் எச் 1 பி விசாவுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் குறைந்தபட்ச அளவு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு மிக அதிக அளவில் ஊதியம் நிர்ணயிக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உத்தரவால் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை பணியில் நியமிப்பது பெரும் பிரச்சினையானது.
இப்புதிய விதிமுறை மே 14, 2021 முதல் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க தொழிலாளர் நலத்துறைக்கு அதிபர் பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு முன் பாக பொதுமக்களின் கருத்துகள் கேட்டறியப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தின் மூலம் தற்போது ஊழியர்கள் பெறும் ஊதியத்தை விட 35 சதவீதம் கூடுதலாக பெறுவர். இது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். மேலும் ஆண்டுக்கு 85 ஆயிரம் பேருக்கு எச் 1 பி விசா வழங்கும் வரம்பை அதிகரிக்க வேண்டும் என நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. வரம்பு நிர்ணயித்தால் உலகின் திறமை மிக்கவர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த் துவது பாதிக்கப்படும் என அவை சுட்டிக்காட்டியுள்ளன.