Published : 09 Mar 2021 01:40 PM
Last Updated : 09 Mar 2021 01:40 PM

அமெரிக்காவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா பலி எண்ணிக்கை 1000க்கும் கீழ் குறைவு: ஜான்ஸ் ஹாப்கின்ஸ்

மூன்று மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தரப்பில், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 749 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். நவம்பர் மாதம் 29ஆம் தேதி கரோனாவுக்கு 822 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது கரோனா பலி எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தேவையான கரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு கிடைக்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் சவாலாக இருக்கும் கரோனா தொற்றைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே.

இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மட்டுமே ஒரே டோஸாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா, அவசரகாலப் பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x