Last Updated : 02 Mar, 2021 01:53 PM

 

Published : 02 Mar 2021 01:53 PM
Last Updated : 02 Mar 2021 01:53 PM

கரோனா வைரஸ் பரவல் விரைவாக முடிவுக்கு வர சாத்தியமில்லை: உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் கரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்பது முதிர்ச்சியற்ற சிந்தனை. அதற்குச் சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.50 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவரை, 25.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 9 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக அளவில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்தத் தடுப்பூசியின் வருகையில், உலக அளவில் கரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால திட்டத்தின் இயக்குநர் தலைமை மருத்துவர் மைக்கேல் ரேயான் கூறுகையில், ''கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனா பரவல் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனை முதிர்ச்சியற்றது, இயல்புக்கு மாறானது.

கரோனா தடுப்பூசியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவும், உயிரிழப்பும் தடுக்கப்படும், குறைக்கப்படுமே தவிர, கரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்துவிடாது. உலகம் முழுவதும் தற்போது கரோனா பரவலைக் குறைக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், கரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், கரோனா உயிரிழப்பையும் வேண்டுமானால் முடிவுக்குக் கொண்டுவரலாம். இப்போது புள்ளிவிவரங்கள்படி, கரோனா தடுப்பூசியால் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரும். அதை அப்படியே நாம் வேகப்படுத்திக் கொண்டு சென்றால், நாம் கரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரலாம். ஆனால், இப்போதுள்ள சூழலில் கரோனா வைரஸ் பரவல் மிகுந்த கட்டுக்குள் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம்

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் கூறுகையில், "பல வளர்ந்த நாடுகளில் கரோனா தடுப்பூசி, முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படாமல், இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இது கவலைக்குரிய விஷயம்.

உலகத்தின் பணக்கார நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகியவை தங்களின் மக்களுக்கு 3 மாதங்களுக்கு முன் கரோனா தடுப்பூசியை போடத் தொடங்கிவிட்டன. ஆனால், ஏழ்மை நாடுகளான கானா, ஐவரி கோஸ்ட் போன்றவற்றுக்கு இந்த வாரத்தில்தான் தடுப்பூசி போடுவதே தொடங்கப்படுகிறது

உலக நாடுகள் கரோனா தடுப்பூசியில் போட்டி போட்டுவிடக் கூடாது. இது கரோனா வைரஸுக்கு எதிராக நாம் அனைவரும் நடத்தும் பொதுவான போட்டி. உங்கள் நாட்டின் மக்களை இடர்ப்பாடுகளில் சிக்கவையுங்கள் என நாங்கள் கூறவில்லை. உலகத்தின் முயற்சிக்குத் துணையாக இருந்து உலகெங்கும் கரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவரத் துணைபுரியுங்கள் என்றுதான் கூறுகிறோம். கடந்த 7 வாரங்களுக்குப் பின் கரோனா வைரஸ் பரவல் கடந்த வாரம் முதல் முறையாக அதிகரித்துள்ளது வேதனையாக இருக்கிறது, அதிர்ச்சியாக இல்லை" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x