Published : 01 Mar 2021 05:44 PM
Last Updated : 01 Mar 2021 05:44 PM

குழந்தைகளுக்கு இவ்வருட இறுதியில் கரோனா தடுப்பு மருந்து: அமெரிக்கா

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் உயர் தொற்றுநோய் ஆலோசகர் அந்தோனி கூறும்போது, “நம்மிடம் தற்போது மூன்று சிறந்த பலன்களைத் தரக்கூடிய தடுப்பு மருந்துகள் உள்ளன. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதி அல்லது 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் போடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் சவாலாக இருக்கும் கரோனா தொற்றைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே.

இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மட்டுமே ஒரே டோஸாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா, அவசரகாலப் பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x