Published : 01 Mar 2021 12:53 PM
Last Updated : 01 Mar 2021 12:53 PM

தடுப்பூசிகள் கரோனா பலியைத் தடுக்கின்றன: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள கரோனா தடுப்பூசிகள் மருத்துவமனைகளில் சேருபவர்களின் எண்ணிக்கையையும், இறப்பையும் தடுக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் கூறும்போது, “உலகம் முழுவதும் 10%க்கும் குறைவான மக்கள் கரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். 50%க்கும் அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டபின் எதிர்ப்பு சக்தியைப் பெறுகின்றனர். தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் மருத்துவமனைகளில் சேருபவர்களின் எண்ணிக்கையையும், இறப்பையும் தடுக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

மாடர்னா, பைஸர், ஜான்சன் & ஜான்சன் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதில் பைஸர் கரோனா தடுப்பு மருந்து உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x