Published : 01 Mar 2021 10:34 AM
Last Updated : 01 Mar 2021 10:34 AM

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல்: 18 பேர் பலி

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 18 பேர் பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தரப்பில், “மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை யாங்கூனில் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் ராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மியான்மரில் நடக்கும் போராட்டங்களைத் தடுக்கும் பொருட்டு ராணுவம் தரப்பில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “ராணுவம், முன்பு கட்டுப்பாட்டைக் காட்டியது. ஆனால், அராஜக கும்பல்களைப் புறக்கணிக்க முடியவில்லை எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாமல் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது.

என்ன நடக்கிறது மியன்மரில்?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x