Published : 27 Feb 2021 02:14 PM
Last Updated : 27 Feb 2021 02:14 PM

டோரண்டோ தமிழ் இருக்கைக்குத் தமிழக அரசு ரூ.1 கோடி நன்கொடை

டோரண்டோ தமிழ் இருக்கைக்குத் தமிழக அரசு ரூபாய் 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தமிழ் இருக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் இருக்கை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “உலகத் தாய்மொழி தினம் கொண்டாடும் இந்த நாட்களில் முதல்வரால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியூட்டுகிறது.

இந்தியாவில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் வளர்க்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக லண்டன் ஆக்ஸ்போர்டு, ஜோகன்ஸ்பர்க், மலேசியா, இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் வெளிநாட்டுத் தமிழ் இருக்கைகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்படும். இதன் தொடர்ச்சியாக கனடா நாட்டின் சர்வதேசக் கல்வி மையமான டோரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் (ஏறக்குறைய 170,0000 டாலர்கள்) தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழக அரசு 10 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய உதவி செய்தது. ஹார்வர்டின் தொடர்ச்சியாக டோரண்டோவிலும் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி இரண்டு வருடங்களுக்கு முன்னரே தொடங்கி தற்போது முன்னேற்றம் கண்டிருக்கிறது. கனடாவில் மூன்றரை லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழர்களுக்கும், தமிழுக்கும் பலவித முன்னுரிமைகள் வழங்கும் நாடு கனடா. ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபு மாதமாக அறிவித்து கனடா மக்கள் அதை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள்.

கனடாவில் முதல் இடத்தில் உள்ள டோரண்டோ பல்கலைக்கழகமும் கடந்த பல வருடங்களாகத் தமிழ் மரபைக் கொண்டாடி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு உதவி செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியது தமிழ் இருக்கை அமைப்பு. அதன் பயனாக தற்போது ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது.

டொரண்டோ பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்கத் தேவையான வைப்பு நிதி 3.0 மில்லியன் டாலர்கள். ஆனால், கனடா வாழ் தமிழ் மக்கள் ஏற்கெனவே 2.44 மில்லியன் டாலர்களைத் திரட்டிவிட்டார்கள். எஞ்சிய தேவை 5,60,000 டாலர்கள் மட்டுமே. அதாவது இந்திய மதிப்பில் 3.2 கோடி இந்திய ரூபாய். இதில் இப்பொழுது தமிழ்நாடு அரசு ஒரு கோடி வழங்கிவிட்டதால் மேலும் தேவைப்படும் நிதி 2.2 கோடி ரூபாய் மட்டுமே. உலகத் தமிழர்களின் உதவியால் இது விரைவில் சாத்தியமாகிவிடும் எனத் தமிழ் இருக்கை அமைப்பு எதிர்பார்க்கிறது.

முழு நிதியும் சேர்ந்தவுடன், பல்கலைக்கழக விதிகளின்படி டோரண்டோ தமிழ் இருக்கையின் தலைவராக ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவார். முனைவர் பட்ட ஆய்வு மாணவ, மாணவிகள் இவருடைய வழிகாட்டலில் பல்வேறு விதமான உயரிய தமிழ் ஆராய்ச்சிகளை இங்கே முன்னெடுப்பார்கள். இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் உலகத் தரமானவையாக இருக்கும். மற்றைய பல்கலைக்கழகங்களின் மதிப்பைப் பெறும். தமிழ்ப் பேராசிரியர் தலைமையில் பல்வேறு மாநாடுகள் நடைபெறும். உலகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் மாணவப் பரிமாற்றம் நிகழும். டோரண்டோவில் அமையும் தமிழ் இருக்கையின் வெற்றி தமிழின் வெற்றியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஹார்வர்ட் தமிழ் இருக்கையைத் தொடர்ந்து, தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர், மருத்துவர் விஜய் ஜானகிராமன், கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், முனைவர் மு. ஆறுமுகம் உள்ளிட்ட பலருடைய முன்னெடுப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஹார்வர்ட் தமிழ் இருக்கையைத் தொடர்ந்து தற்போது டோரண்ரோ தமிழ் இருக்கையும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x